Tuesday, November 29, 2011

ஆங்கிலம் தெரியாதென்பது என்ன அவ்வளவு கேவலமா?

சமீபத்தில் கல்லூரி ஒன்றில் நடந்த நிகழ்விற்கு பேச அழைத்திருந்தார்கள்.நிகழ்ச்சிக்கு முதல் நாள் கூப்பிட்ட நண்பர் தொலைபேசியில் அழைத்து `தமிழ் அங்கே ஆங்கிலத்தில் தான் பேசணுமாம் ...` என்றார். நான் மறு நொடி சொன்னேன் `மன்னிக்கவும் எனக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேச வராது`

அவ்ர் ஆச்சரியமாக கேட்டார் `ஆங்கிலத்தில் பேச வராதா..?அதை இவ்வளவு பெருமையாக சொல்லி கொள்கிறீர்கள்..கொஞ்சம் கூச்சமாக இல்லையா?` நான் அமைதியாக சொன்னேன் `இதில் என்ன கூச்சப்பட இருக்கிறது? எந்த ஆங்கிலேயனாவது தமிழ் தெரியவில்லை என்று கூச்சப்படுகிறானா...?

அவர் அலுத்துக்கொண்டு சொன்னார் ` ஆமாம் உங்களை மாதிரி கிறுக்கு பயலுக தான் இன்னும் தமிழை கட்டிக்கொண்டு அழுகிறீர்கள்..எந்தனை தமிழ் வாத்தியார்கள் தங்கள் பிள்ளைகளை

தமிழ் வழியில் படிக்க வைத்திருக்கிறார்கள் என்று உங்களால் சொல்ல முடியுமா?`

நான் சொன்னேன் `தமிழ் வாத்தியார் வேலைக்கு மாதம் ஒரு லட்சம் சம்பளம் என்று சொல்ல சொல்லுங்கள்..அடுத்த வருடம் தமிழ் படிக்க நுழைவுத்தேர்வு நடத்தி தான் மாணவர்களை தேர்வு செய்ய வேண்டியிருக்கும். அதைப்போல மருத்துவம்,பொறியியல்,சட்டம் ஆகிய உயர் தொழில் படிப்புகளை தமிழில் நடத்த புத்தகமும்,அரசாணையும் வெளியிட சொல்லுங்கள்...இதையெல்லாம் செய்ய வக்கற்ற தமிழின தளபதிகள் தங்கள் வீட்டு பிளளைகளை ஆங்கில வழியில் படிக்க அமெரிக்காவிற்கு அனுப்பி விட்டு ஏமாந்த அப்பாவி தமிழனுக்கு தமிழில் படிக்க அறைகூவல் விடுப்பார்கள்`

மேலும் சொன்னேன் `ஆங்கிலம் தெரிந்தவன் அறிவாளி என்றும் அந்த மொழி தெரியாதவனை முட்டாள் என்றும் `சிவப்பாய் இருப்பவனெல்லாம் நல்லவன்` என்கிற காமெடியைப் போல் உளறித் திரிகிறார்கள். உண்மையில் ஆங்கிலம் தெரிவதென்பது ஒரு மொழியறிவு மட்டுமே..அது ஒரு மனிதனின் மேதமைத்தன்மையை நிர்ணயிக்கும் அல்லது அளக்கும் காரணி அல்ல..`

`இன்னும் சில பேர் பிதற்றுகிறார்கள் ஆங்கிலம் படித்தால் உடனே வேலை கிடைக்குமென்று...அப்படியென்றால் அமெரிக்காவில் வேலையில்லாத இளைஞர்களே இல்லையா..?

விவாதம் அனல் பறக்க தொடர்ந்தது....முடிந்தால் அதை இன்னுமொரு நாளில் பதிவு செய்கிறேன்...

Sunday, October 23, 2011

சிவனே...!

ஊமையாய் படைத்தாய் என்னை

ஊறு செய் புலன்கள் செய்தாய்

தீமையாய் ஆசையுள் புகுந்தேன்-என் சிவனே

தீருமோ தீவினை யாவும் நன்றே..!

Tuesday, September 13, 2011

ஒரு துளி...

ஒரு துளி மை

ஒரு துளி மது

ஒரு துளி விஷம்

ஒரு துளி விந்து

ஒரு துளி வியர்வை

ஒரு துளி கண்ணீர்

ஒரு துளி உதிரம்

ஒரு துளி மழை

ஒரு துளியல்ல நான் என

உணர்த்திட

எத்துளியாவது இணைத்திடும் என்னை

உன்னுடன்...உலகுடன்...



Thursday, June 2, 2011

நல்லாட்சி நடந்தால் நல்லா பாராட்டுங்க...!


துறை அனுபவமுள்ள புதிய முகங்களுக்கு அமைச்சர் பதவி,ஆரவாரமில்லாமல் நன்றி சொல்ல அறிவுறுத்தல்,அமைச்சர்களுக்கு நடத்திய பயிற்சிப் பட்டறை,துறைரீதியாக முடிக்கி விடப்பட்டுள்ள நிர்வாகம்,வாக்குறுதிகளை நிறைவேற்ற தனி அமைச்சகம்,மாவட்டந்தோறும் ஆடம்பர விழாக்கள் இன்றி இலவச அரிசி வினியோகம் இதோ இப்போது அரசியல் தலையீடற்ற நிர்வாகத்திற்கு அடையாளமாக அதிமுக வினர் மீதே அதிரடி நடவடிக்கை என அம்மாவின் ஆரம்பமே அட்டகாசமாக உள்ளது. அம்மாவின் தலைமையில் ஒரு புதிய பொற்கால தமிழகம் அமையும் என்ற நம்பிக்கை வந்துள்ளது.

Friday, April 22, 2011

கிறுக்கு...

என்னைச் சுற்றி எல்லாமிருக்கிறது
எல்லாவற்றுகுள்ளும்
எனக்குகந்த நான் இருப்பதையே காண்கிறேன்...

உண்மையில்
எல்லாமென்பது இல்லை..
இல்லைகளுக்குள்ளும்
இருக்கும் என்னை
தேடியலையும் தேடுதலின்
மூச்சு வாங்குதலே
எல்லாமுமாக இருக்கிறது...

விரித்துவைத்த வெள்ளைதாளின் மீது
காற்றினால் அசைகிறது பேனா..
பின்
என் கையிலும் அசைகிறது-கற்பனையினால்...

காற்றினால் அசையும் அசைவை
ஏதாவதொரு கணத்தில்
என் கையிலும் கொண்டுவர முடிந்ததெனில்....
அற்புதம்...அற்புதம்...
நானும் காற்றும் கலந்தே எழுவோம்..
பாய்வோம்....

எழுத்துகளும், வரிகளுமற்ற
எங்கேயோ ஒளிந்துகொண்டுள்ளது
உண்மையான கவிதை...
அதை
வரிகளாலும் வார்த்தைகளாலும்
வருடி வருடி
அடையாளப்படுத்த விழையும்
அற்ப முயற்சிகளே
இதுவரை வெளிவந்த அனைத்து கவிதைகளும்..
இது உட்பட...

Saturday, March 12, 2011

மழை!

உயிர்களின் பசியடக்கும்
பயிர்களின் தாய்ப்பாலே..!

வானம் வழங்கிய அருட்கொடையே!
வறட்சி வென்றிடும் நீர்ப்படையே..!

எதிர்பார்ப்புகளற்ற காரியமாற்ற
எங்கள் உதாரணமே..!

மேகம் கிடுகிடுக்க மின்னல் ஒளிவிளக்காய்
வானம் விட்டு வரும் வசந்த பூ விதையே..!

ஆறுகள் பெருக்கெடுத்து
கடல் தோறும் கரை புரளும்
அலைகளின் பிறப்பிடமே..!

விதைகளை விருட்சமாக்கும்
விந்தை செய் விண்துளியே..!

கருணையின் வடிவமாய்
கசிந்துருகி வழியும் நீர்ச்சரமே..!

வறண்ட உலகைக் கண்டு
வானம் வடித்த கண்ணீரே..!

விதைத்து காத்திருக்கும்
விவசாயியின் வியர்வையை
அர்ச்சித்து தூவும்
அர்ச்சனை பூக்களே..!

நிலத்தில் நீ விழுந்தால்
நெல் முத்தாகிறாய்..
சிப்பிக்குள் நீ சிந்தினால்
நல்முத்தாகிறாய்..
முத்து முத்தாய் நீ முத்தமிட்டு தான்
மொத்த பூமியும் சுகப்படுகிறது..!

இயற்கைக்கு மாறாய் நீ
இந்த வருடம்
அதிகம் பொழிந்தாய் என
ஆனந்தப்பட்டோமே...
இப்போதல்லவா புரிகிறது-அது
ஆழிப்பேரலையால் அல்லல்படப்போகும்
மனிதகுலத்தை எண்ணி நீ
வடித கண்ணீர் என்று..!

நற்பெண்டிரின் நாக்குக்கு கட்டுப்படும் நாயகியே..!
வழங்கி வாழ்வளித்து
பொழியும் இடந்தோறும்
பொலிவை உண்டாக்கும்
தண்ணீர் குலத்தின் தலைமகளே..!

அழித்து அபகரித்து
ஆறாத்துயர் கூட்டும்
ஆழிப்பேரலையை-இனி
தண்ணீர் குலம் விட்டே
தள்ளி வைப்பாய் என் தாயே..!

பூமியின் அழுக்கினை
போக்கிட பொழிந்தாய்-இனி
மனிதரின் மன அழுக்கை
மாய்த்திட அவர்தம் மனதுக்குள் பொழி தாயே..!

அகிலத்தின் உயிர்ச்சத்தே..!
அனைத்துலகின் தத்துவமே..!
மகாசக்தி! தேவி ..!
மாரி உன்னை வணங்கி நின்றேன்
எங்கள் மனக்குறையை கேட்டருளாய்..

நீ வழங்கிய அருட்கொடையால்
நிறைந்துவரும் நதிப்போக்கை
நிறுத்தி அணை கண்டார்..
அந்த அணைகள் நிறைந்தழிந்து
தளும்பி சீற்றமுடன் தமிழகம்
தழுவும் வகையில் இனி
தாயே நீ பொழிக!
தமிழர் தாகம் தணித்திடுக..!

Tuesday, February 15, 2011

வலி....

  • நிலவெரியும் இரவு
  • நேர்மேலே நட்சத்திரம்
  • உற்றுப்பார்க்கிறதா உன்னையும்..
  • கனவெழுதி கரைந்து போகும்
  • கன்னங்கள் கோடாகும்
  • நினைவிருக்கா உனக்கும் கூட..
  • உன் இமைபிரியும் சத்தம் கூட
  • எழுப்பிவிடும் என்னை-என்
  • உயிர் பிரியும் வலி கூடவா
  • உணரவில்லை உனக்கு..?

Thursday, February 3, 2011

குழந்தைகள்

விடிகாலை! இளம் குருத்து!

முதல் தூறல்! புது நாத்து !

வீரிய விதை ! கீறிய நிலம் !

எழுதாக் காகிதம் ! உயிருள்ள ஓவியம் !

ஒளிர் கதிர் ! வளர் நிலவு !

இன்றைய நிகழை இனிப்பாய் மாற்றும்
நம்பிக்கை சுமக்கும் நாளைய நிஜங்கள்..!

அவரவர் கடவுளின் அற்புத தரிசனம்...!

அனுபவிக்க துடிக்கும் உண்மையான சுதந்திரம்..!

பசியில் கிடைக்கும் பல்சுவை விருந்து
பசியால் விளைந்த பசி நீக்கும் மருந்து...!

இவைகள் போலவும் இன்னும் கூடவும்
குழ்ந்தைகள் பற்றி கவிதைகள் கூறலாம்

ஆனால்....

குழந்தைகள் பற்றி கவிதைகள் புனைதல் தேவையற்றது...

ஏனெனில்

கவிதைகள் பற்றி கவிதைகள் எதற்கு...?




Thursday, January 20, 2011

மௌனம் என்ன மொழி?

அனைத்து நதிகளிலும்
அன்பே பிரவகிப்பதால்
மதங்களைக் கடப்பதைக் காட்டிலும்
மதங்களில் கரைவதன் மூலம்
மனிதத்தில் சங்கமிப்போம்
மகா சமுத்திரமாய் ஆர்ப்பரிப்போம் !


உணர்வுகளை சொல்லவல்ல
ஊடகமே மொழி !
மனங்களை இணைப்பதொன்றே
மகத்தான அதன் பணி !
ஊடகத்தின் பெயரால்-நமக்குள்
கோடுகிழிக்க வருவோரிடத்து
மௌனமாயிருங்கள்..-கேளுங்கள்
மௌனம் என்ன மொழி ?

வியர்வையாய் சிந்த வேதனைப்பட்டால்
கட்டாயம் ஒருநாளதை கண்ணீராய் சிந்தவேண்டிவரும்
என்பதாலேயே
வியர்வைக்கும் கண்ணீருக்கும் ஒரே சுவை..!
ஆகவே அருமை நண்பர்களே..
உழைத்தவன் கைகளில் உரிமைகள் தருவோம்
அவரை ஏய்த்து
பிழைப்பவர் செயலை பிழையென்றே கொல்வோம்..!

தீண்டிடில் தின்றிடும் தீயது சாதா தீ!
தீண்டாமை தின்றிடும் தீயெது சாதி!
தீண்டியும், தீண்டாதும்
திகுதிகுவென எரியும் தீ அது அறிவுத் தீ!
அக்கினிக் குஞ்சில் உயர்வெது தாழ்வெது?
அறிவுத்தீயில் முதலெது முடிவெது?
அறிவுத்தீயால் அழிப்போம் சாதியை..அது கொடியது..!

கனவுச்சுடரால் சமைப்போம் வழியை
அறிவுச்சிறகால் அளப்போம் வெளியை
பறப்போம் கலப்போம்
பள்ளம் மேடற்ற சமூகம் படைப்போம்..!

மத மொழியின வர்க்கபேதம் தகர்த்து
அனைவரும் சமமெனும்
ஆனந்த சமூகம் படைப்பது
மனிதரனைவரின் பொறுப்பு..!
ஏனெனில்..
சக மனிதரனைவரும்
சகோதரனே என்பதற்கு
சாட்சியாய் கிடக்கிறது
உனக்குள்ளே ஊறித் ததும்பி நிற்கும்
உதிரச் சிவப்பு..!




Wednesday, January 12, 2011

குழந்தைகள்

விடிகாலை! இளங்குருத்து!
முதல் தூறல்! புது நாத்து!
கீறிய நிலம்! வீரிய விதை!
எழுதாக் காகிதம் ! உயிருள்ள ஒவியம் !

பசிக்கையில் கிடைக்கும் பல்சுவை விருந்து !
பசியால் விளைந்த பசிநீக்கும் மருந்து !

இன்றைய நிகழை இனிப்பாய் மாற்றும்
நம்பிக்கை சுமக்கும் நாளைய நிஜம் !

அனுபவிக்க துடிக்கும் உண்மையான சுதந்திரம் !
அவரவர் கடவுளின் அற்புத தரிசனம் !

இவைகள் போலவும் இன்னும் கூடவும்
குழந்தைகள் பற்றி கவிதைகள் கூறலாம்
ஆனால்...
குழந்தைகள் பற்றி கவிதைகள் புனைதல் தேவையற்றது
ஏனெனில்.....

கவிதைகள் பற்றி கவிதைகள் எதற்கு...?

Tuesday, January 11, 2011

மரமும் நானும்...

நீள வளர்ந்தால்
பாதை மறையுமென
நெடுஞ்சாலைதுறையினர்
நீக்கி எறிந்தனர்...

பக்கம் படர
சுற்றுச்சுவர் பாழாகுமென
வீட்டு உரிமையாளர்
வெட்டித்தள்ளினார்...

தாழ படர
கீழே வடைதட்டி விற்பவர்
கைகள் இடிக்குமென
கழித்து கட்டினார்...

அனைவரையும் அனுசரித்து
எவரையும் பாதிக்காமல்
எப்பக்கம் படர்வதென
புரியாத பதைபதைப்பில்
சாலையோர மரமும்
மரத்தடியில் நானும்...

Monday, January 10, 2011

மகாநதி...

புரிந்தவைகளை தீர்மானமாக மறுக்கும்...
மறுப்புகளிலிருந்தே மறுபடியும் புரியவைக்கும்
உயிரும் உணர்வுமற்று
அசைவுகளை உண்டாக்கும்..
அசைவுகளை அடையாளம் காட்டியே
உயிர்களை உருவாக்கும்...

சைகைகளின் ஒலிவடிவாய்
மொழிகளை பிரசவிக்கும்..
மொழிகளின் சப்தத்தினால்
நிசப்தத்தின் பெருமைபேசும்...

உயிரற்றதொரு நாள் வரும் என்ற
உணர்வினூடே
வாழ்தலின் சுகம் காட்டும்..

நாளாய் கிழமையாய்
நாட்காட்டியில் பிடித்து விட்டோமென்று
கணக்கில் திருப்திபடுவோரை
கண்டு நகை காட்டும்...

எப்போதிலிருந்து எப்பொதுவரையென்ற
விடைதெரியா கதைசொல்லி
கணக்கற்ற தன் கரங்கள் கொட்டி சிரிக்கும்...

பூமிக்கும் வானுக்குமிடையே
காற்றாய் நீராய் நெருப்பாய்
வெவ்வேறாய் காட்சி தரும்..
பின்னெல்லாம் கலந்து
யாதுமாகி நிற்கும்...
சிலநேரம்
எதுவுமற்றும் தோணும்...

Sunday, January 9, 2011

கட்சிகள் பொங்கினால்...

தொண்டர்கள் பொங்கிட வாழ்த்துகள் வழங்கிடும் கட்சிகள் பொங்கினால் எப்படி இருக்கும்..?ச்சும்மா ஒரு ஜாலி கற்பனை ...

அடுக்கு மொழி அடுப்பில்
ஒரு ரூபாய் அரிசியுடன்
வார்த்தைஜால வெல்லம் கலந்து
இலவச நெய் ஊற்றி
`கை`பார்த்து இறக்கினால்
தி மு க பொங்கல்

கணக்கு கேட்டு கனன்ற அடுப்பில்
எம் ஜி ஆர் பானை ஏற்றி
அம்மா களைந்த அரிசியுடன்
அதிரடி வெல்லம் கொட்டி
கொஞ்சம்
ஆன்மிக ஜோதிட நெய் கலந்தால்
ஆச்சு ...அ தி மு க பொங்கல்

கதிர் அறுவாள் கொண்டறுத்த
வெண்மணி அரிசியுடன்
கைசுத்தி வென்றெடுத்த
வியர்வையை வெல்லமாக்கி
நெய்யற்று நீரற்று வறண்ட
போராட்ட அடுப்பில் எழும்
சிவந்த தழல் மேலே
பொங்கி பொங்கி எழுந்தால் அது
காம்ரேட்களின் கம்யூனிஸ்ட் பொங்கல்

நேரு குடும்ப அடுப்பில்
காந்தி பெயரிட்ட பானையில்
மதசார்பற்ற நெல் குத்தியெடுத்த
மைனாரிட்டி அரிசியுடன்
கூட்டணி வெல்லம் கொட்டி
கோஷ்டி மார்க் நெய் ஊற்ற
எமர்ஜென்சி மறந்து பொங்கும்
காங்கிரஸ் பொங்கல்

அகிம்சை அரிசியுடன்
சத்திய சர்க்கரை கலந்து
எளிமை நெய் ஊற்றி
இறக்கினால்
பாவ்ம் யாரும் சாப்பிட விரும்பாத
காந்தி பொங்கல்