Wednesday, May 30, 2012















 

Sunday, April 29, 2012

ஒரே இனிப்பு...தனித்தனி நாக்கு...



பேசுமொழி கேட்க பெருங்கூட்டம் காத்திருக்க

ஆசைமொழி பேச ஓடிவந்தேன் உன்னிடம்

வீசுமிரு விழி மூடி மயக்கத்தில் நீ சொன்னாய்...

`மொட்டை மாடி காத்துல நல்லா வருதுல்ல தூக்கம்...`




Wednesday, April 25, 2012


 கண்ணிருந்தும் குருடராய்...


மகாபாரதத்துடன் தொடர்புடைய இரண்டு செய்திகள் அண்மையில் ஊடகங்களில் வெளியாகின. முதலாவதாக, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கடஸ்ராஜ் சிவன் ஆலயத்தில் உள்ள நச்சுப்பொய்கை வற்றுகிறது என்பது. இரண்டாவது, உத்தரப் பிரதேச மாநிலம், பாராபங்கி மாவட்டத்தில் உள்ள கிந்தூர் கிராமத்தில் இருக்கும் சிவன் கோயிலின் பாரிஜாத மரம் பட்டுவிட்டது என்பது.
நீர் அருந்த நச்சுப்பொய்கைக்குச் சென்ற பாண்டவர் சகோதரர்கள், அதைப் பாதுகாத்து நின்ற பூதத்தின் கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தெரியாமல் மயக்கமுற, தருமர் அனைத்துக் கேள்விகளுக்கும் விடையளித்து மீட்டு வந்ததாக மகாபாரதத்தில் ஒரு கட்டம் வரும். "யட்சப் பிரஸ்னம்' என்று சொல்லப்படும் அந்தக் கேள்வி பதில்கள் பல உள்ளார்ந்த தத்துவங்களை வெளிப்படுத்துவதாக அமையும். கோன் பனேகா குரோர்பதி, டீலா நோ டீலா, கோடீஸ்வரர் ஆகலாம் போன்ற இன்றைய வெற்றிபெற்ற டிவி நிகழ்ச்சிகளுக்கெல்லாம் முன்னோடி இந்த வினா-விடை போட்டி.
அதேபோன்று பாஞ்சாலி கேட்டதற்காக பாரிஜாத மலரை வீமன் தேடிக் கொண்டு வந்ததாக மகாபாரதம் சொல்கின்றது. தாய் குந்தியின் வழிபாட்டுக்காக பாரிஜாத மரத்தையே அர்ஜுனன் கொண்டுவந்ததாகவும், அதனைக் குந்தி இங்குள்ள சிவன் கோயிலுக்கு அளித்துவிட்டதாகவும் மரபுவழியிலான மகாபாரத கிளைக் கதைகள் சொல்கின்றன. கிராமத்தின் பெயரே (கிந்தூர்) குந்தி என்பதன் திரிபுதான் என்கிறார்கள்.
இந்தியாவில் பிற இடங்களில் மிக அரிதாக பாரிஜாத மரங்கள் இருந்தாலும்கூட, கிந்தூரில் உள்ள பாரிஜாத மரம் பல வகையிலும் மாறுபட்டது. பூக்கள் பூக்கும் தருணம் அந்தச் சூழலே ரம்யமாக மாறிவிடுமாம். மணம் பரப்பும் வெண்மையான மலர்கள் உதிரும்போது பொன்நிறமாக மாறிவிடும் என்கிறார்கள்.
இதன் பூக்கள் காயாகி விதையாவதில்லை. இதன் கிளைகளைக் கொண்டு பதியம் போட்டு மரம் வளர்க்கலாம் என்றால் அதுவும் நடைபெறவில்லை. ஏனென்றால், பாரிஜாத மரத்தில் இது ஆண் வகை. உலகத்திலேயே இந்தவகைப் பாரிஜாத மரம் ஒன்றுதான் இருக்கிறது என்கிறார்கள் தாவரவியல் வல்லநுர்கள்.
ஃபைசாபாத்தில் உள்ள நரேந்திர தேவ் வேளாண் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் தாவரவியல் பேராசிரியர்கள் குழு இந்தப் பாரிஜாத மரத்தை அண்மையில் ஆய்வு செய்து, பட்டுவரும் இந்த பாரிஜாத மரத்தைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஆனால், இங்குள்ள மக்கள் இதற்குப் பெருந்தடையாக இருக்கிறார்கள். பேராசிரியர்கள் மரத்தை ஏதாவது செய்து கொன்றுவிடுவார்களோ என்கின்ற அச்சம்தான் காரணம். சுமார் 1000 ஆண்டுகள் முதல் சுமார் 4000 ஆண்டுகள் வரை இதன் வயது இருக்கலாம் என்கிறார்கள். இந்த அரிய மரம் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று.
பாரத மக்கள் அனைவரும் தொன்றுதொட்டு இயற்கை வழிபாட்டில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பதன் அடையாளம்தான் கோயில்களில் உள்ள மரங்கள். இந்திய மண்ணில்தான் மரங்கள் தெய்வமாக வழிபடப்படுகின்றன. ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு ஸ்தல விருட்சமும், தீர்த்தமும் (குளம்) உண்டு. எந்த தட்பவெப்பத்தில், எத்தகைய மண்வளத்தில் கடல்மட்டத்திலிருந்து எந்த அளவுக்கு உயர்ந்த இடத்தில் என்னென்ன மரங்கள் வளரும் என்பதையும், அதன் மருத்துவக் குணங்களையும் தெரிந்துதான் கோயில்களில் ஸ்தல விருட்சங்களை வைத்துள்ளனர் நமது மூதாதையர். மா, பலா, புன்னை, மகிழம், மருதம், வன்னி, பன்னீர், பத்திரி, அரசு, வேம்பு என பல்வேறு மரங்களை ஸ்தல விருட்சமாக வைத்துப் பாதுகாத்து வந்தனர்.
கோயில்களில் பாதுகாக்கப்பட்ட ஸ்தல விருட்சங்கள் அந்த வகை மரங்களிலேயே மிகவும் தனித்துவமானவை. இந்த மாமரம் போனால் இன்னொரு மாமரம் என்பதைப் போன்றதல்ல. அதைத்தான் கிந்தூர் பாரிஜாத மரம் நமக்கு உணர்த்துகின்றது. அவை மிக அரிதான மரங்கள். ஆகையால்தான் இந்த மரங்களுக்கு அதீத மருத்துவக் குணங்கள் இருந்தன.
தீர்த்தம் (குளம்) என்பதும், அந்தக் கோயில் அமைந்துள்ள மண்ணின் கனிமத் தன்மையால் குளத்து நீர் வேதியியல் மாற்றம் பெற்று மருத்துவக் குணம் பெறும் வகையிலேயே அமைக்கப்பட்டன. ஒவ்வொரு கோயில் குளத்துக்கும் ஒரு விசேஷம். ஆகவேதான், ஒவ்வொரு நோய்க்கும் ஒரு கோயில் குளத்தின் நீரைப் பரிந்துரைத்தார்கள்.
இன்று எல்லா கோயில்குளங்களும் வற்றிக் கிடக்கின்றன. திருநள்ளாறு, கும்பகோணம் மகாமகம் குளங்களில் விழாக் காலங்களில் லாரிகளில் நீரைக் கொண்டு வந்து நிரப்புகிறார்கள். பல்லாயிரம் பேர் குளிப்பதால், சுகாதாரம் கருதி குளோரினைக் கொட்டுகிறார்கள். இதனால் என்ன பலன் கிடைத்துவிடும்? ஆன்மிகப் பலனும் இல்லை. அறிவியல் உண்மையும் இல்லை.
சமயத்துடன் இணைந்து இறைவழிபாட்டின் ஒரு பகுதியாக மரங்களை ஸ்தல விருட்சங்களாக்கிய நமது மூதாதையரின் தொலைநோக்குப் பார்வையை வியக்காமல் இருக்க முடியவில்லை. ஸ்தல விருட்சங்களுக்குப் புனிதத் தன்மை தரப்படுவதால் அந்த மரங்கள் பாதுகாக்கப்படும் என்பதும், கோயில் தோறும் குளம் அமைப்பதால் நிலத்தடி நீர் பாதுகாக்கப்படும் என்பதும் விஞ்ஞானம் வளராத காலத்து மூதாதையருக்கு இருந்தது. படித்துப் பட்டம் பெற்றதாலேயே புத்திசாலிகளாகி விட்டதாகக் கருதும் நம்மால் அவர்கள் வைத்துவிட்டுப் போனதைக் காப்பாற்றக்கூட முடியவில்லை.
இருப்பதையும் இழந்துவிடாமல் இருக்க வழி காண வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. குறைந்தபட்சம், நமது தமிழகத்திலாவது...

Friday, April 6, 2012

வாழ்க தினமணி!

எந்த அரசும் நூலகத்துறைக்கு அதிக நிதி ஒதுக்காது ,ஏனெனில் மக்கள் அதிகம் அறிந்து கொண்டால் அது தங்களது ஊழல் அதிகாரத்திற்கு ஆபத்து என்பதால்.ஆனால் ஊழலற்ற அரசை நடத்த முயற்சி செய்யும் எங்க அம்மாவின் பார்வைக்கு இந்த தலையங்கம் வர நேர்ந்தால் அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டு நூலகம் செழிக்க வழியுண்டு.எப்படியிருப்பினும் வாழ்க தினமணி!

முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க அரசு அண்மையில் ஆங்கில நாளிதழ்களின் கோபத்துக்கு ஆளானது. காரணம், அரசு மற்றும் அரசு நிதியுதவியில் நடைபெறும் நூலகங்களுக்கு வாங்க வேண்டிய பத்திரிகைகள் என்று 8 பத்திரிகைகளை மட்டுமே அரசு அனுமதித்து ஆணை வெளியிட்டது. 5 வங்காளி, 1 ஹிந்தி, 2 உருது நாளிதழ்கள் இடம் பெற்ற இப்பட்டியலில் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுகூட இடம் பெறவில்லை.
இந்தியா முழுவதிலும் இதற்கு ஆங்கில ஊடகங்கள் எதிர்ப்பு தெரிவித்த பிறகு ஒரு பிரபல ஆங்கில நாளிதழ் உள்பட மேலும் நான்கு உள்ளூர் நாளிதழ்களையும் பட்டியலில் சேர்த்துப் புதிதாக ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த அரசாணையில் இருக்கும் இன்னொரு முக்கியமான அம்சம் ஒன்றும் உண்டு. அதை ஆங்கிலப் பத்திரிகைகள் ஏனோ பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அது என்னவென்றால், அரசியல் கட்சியின் அதிகாரபூர்வப் பத்திரிகைகளாகவோ, தங்களது அரசியல் ஆதரவை வெளிப்படையாகத் தெரிவித்து நடைபெறும் நாளிதழ் மற்றும் பத்திரிகைகளை அரசுப் பணத்தில் நூலகத்துக்கு வாங்கக்கூடாது என்பதுதான். இதில் மேற்கு வங்கத்தின் கம்யூனிஸ்ட் கட்சிப் பத்திரிகைகளும் அடங்கும். இதைவிட மோசமான சர்வாதிகாரப் போக்கு வேறொன்று இருக்க முடியாது என்று கோபத்துடன் பேசியிருக்கிறார் சீதாராம் யெச்சூரி.
இதில் வேடிக்கை என்னவென்றால், மேற்கு வங்க அரசு அனுமதித்துள்ள முதல்பட்டியலில் இடம்பெற்றிருக்கும் சம்பாத் பிரதிதின், சன்மார்க், அக்பர்-இ-மாஷிக் ஆகிய மூன்று பத்திரிகைகளைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள், திரிணமூல் காங்கிரஸ் சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள். இவர்கள் சார்ந்துள்ள பத்திரிகைகளை அரசியல் பத்திரிகை என்பதா, நடுநிலை நாளிதழ் என்பதா என்ற கேள்வி எழாமல் இல்லை.
மேலும் 5 பத்திரிகைகளைச் சேர்த்து ஆணை வெளியிட்ட அத்துறையின் அமைச்சர், அனைத்துப் பத்திரிகைகளையும் வாங்குவதற்கு நூலகத் துறையிடம் போதிய நிதிவசதி இல்லை. இப்போது நிறைய பத்திரிகைகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. எல்லா நாளிதழ்களையும் வாங்குவது சாத்தியமா? என்று கேட்டுள்ளார். இது முழுக்க முழுக்க உண்மை. இதற்குக் காரணம் நூலகத்துறைக்குப் போதுமான நிதி அளிக்கப்படுவது இல்லை என்பதை மறுக்க இயலாது.
இந்தச் சிக்கல் மேற்கு வங்க மாநிலத்தில் மட்டுமல்ல, எல்லா மாநிலங்களிலும் உள்ளது. உள்ளாட்சிகள் வசூலிக்கும் சொத்து வரியில் 10 விழுக்காடு நூலக வரியாக நூலக ஆணையத்திடம் செலுத்த வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. ஆனால், எந்த உள்ளாட்சி அமைப்புகளும் இதைச் செய்வதே இல்லை. தமிழகத்தையே எடுத்துக் கொள்வோம். 2010 மார்ச் மாதம் வரை நூலக ஆணையத்துக்கு உள்ளாட்சிகள் அளிக்கவேண்டிய நிலுவைத் தொகை ரூ.116 கோடி. இதில் மாநகராட்சிகள் மட்டும் சுமார் ரூ. 22 கோடி செலுத்த வேண்டும்.
அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்கு ரூ. 80 கோடிக்குப் புத்தகம் வாங்கியபோது, நூலக ஆணையத்திடம் பணம் இல்லை. சிறப்பு நேர்வாக ரூ. 50 கோடியை நிதித்துறையிடம் பெற்று, பதிப்பகங்களுக்கு வழங்கினார்கள். ஆனால், இதே நடவடிக்கையை எல்லா நூலகங்களின் புத்தகக் கொள்முதலுக்கும் செய்ய முடியாது.
நூலகங்களின் இந்த நிலைமைக்கு வெறும் நிதிப் பற்றாக்குறை மட்டுமே காரணம் என்று சொல்லிவிட முடியாது. நூலகங்கள் பெரும்பாலும் ஆளும் கட்சியின் பிடியிலேயே இருக்கின்றன. நூலக ஆணைக் குழுவில் அரசுக்கு வேண்டியவர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள். நிதிநெருக்கடியில் உள்ள நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்கும்போது எந்த அளவுக்குக் கவனமாகவும், தரமான புத்தகங்களையும் வாங்க வேண்டும் என்கிற அக்கறையே இல்லாமல்தான் அவர்கள் புத்தகங்களை வாங்குகிறார்கள்.
சென்னையில் ஆண்டுதோறும் நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் அதிக விற்பனையான புத்தகங்கள் என்று ஒரு பட்டியலைத் தயாரித்தால், அதில் 10 விழுக்காடு புத்தகங்கள் கூட, நூலகத்துக்கான கொள்முதல் பட்டியலில் இருக்காது. ஏனென்றால், நூலகங்களுக்கு வாங்கப்படும் புத்தகங்கள் பெரும்பாலும், ஆளும்கட்சியின் துதிபாடிகள் எழுதிய, யாராலும் பேசப்படாத, எவராலும் படிக்கப்படாத நூல்கள்தான். குறிப்பிட்ட சில பதிப்பகங்களும், ஆட்சியாளர்களுக்கு வேண்டியவர்களும் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தித் தங்களது புத்தகங்களை நூலகத்துறை வாங்கும்படி பார்த்துக் கொண்டுவிடுகிறார்கள். ராஜாராம் மோகன்ராய் அறக்கட்டளை போன்ற சில அமைப்புகள் மூலம்தான் தரமான புத்தகங்கள் நூலகத்துறைக்கு வந்து சேர்கின்றன.
வெளிநாடுகளில் உள்ள நூலகங்களில், வாசகர்கள் தங்களுக்கு வேண்டும் என்கிற, அல்லது சிறந்த நூல் என்று அறியவந்த விமர்சனங்களைக் குறிப்பிட்டு, அவற்றை வாங்கி வைக்கப் பரிந்துரைப் பட்டியலில் எழுதுகிறார்கள். அந்த நூலகங்கள் வாசகர்களின் கருத்துக்கு மதிப்புத் தந்து அந்த புத்தகங்களை வாங்கி வைக்கின்றன.
புத்தகங்களையும் நாளிதழ்களையும் பத்திரிகைகளையும் அரசு அதிகாரிகளும் அரசு நியமனம் செய்யும் குழுவும் தேர்வு செய்யும்வரை, நூலகங்கள் தரம் குறைந்த புத்தகங்களின் புகலிடமாகத்தான் தொடரும். நிதிப் பற்றாக்குறை ஒருபுறம் இருந்தாலும், இருக்கின்ற குறைந்த நிதியையும் இப்படி வீண்படுத்துவதுதான் இன்றைய நூலகத்தின் மிகப்பெரும் அவலமாக இருக்கிறது.
குறைந்தபட்சம், அரசியல் கட்சிகளின் அதிகாரபூர்வ நாளேடுகள் அரசு மற்றும் பொது நூலகங்களில் இடம் பெறக்கூடாது என்கிற வரைமுறை பின்பற்றப்படுவதுதான் ஓரளவுக்காவது நடுநிலை நாளேடுகள் நூலகங்களில் இடம்பெறவும், மக்கள் தங்கள் பொது அறிவை வளர்த்துக்கொள்ளவும் வழிகோலும். கடைசியாகக் கிடைத்த தகவலின்படி, திரிணமூல் காங்கிரஸ் கட்சி, தங்களது கட்சிக்காக ஒரு நாளிதழைத் தொடங்க இருப்பதாகத் தெரிகிறது.
தெற்கோ, வடக்கோ, மேற்கோ, கிழக்கோ இந்தியாவைப் பொருத்தவரை அரசியல் கட்சிகள் எல்லாமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது, வேறென்ன?

Tuesday, February 21, 2012



காந்தி ஜெயந்தி


அன்று மட்டுமாவது


உன் கண்களை மூடி வையடி,


மதுக்கடைகளை திறந்தால் அன்று


மன்னிப்பே கிடையாதாம்...


Tuesday, February 14, 2012

அடிப்போடி...







ஒவ்வொரு நாளும்


நீ கையசைத்து விடைகொடுக்கும்


நிமிடத்திற்கு

முந்தைய நிமிடத்தில்


முடிந்து போகிறது


அன்றைய தினம்!

மழைக் கோலம்



`வருத்தப்பட்டாயாமே...!

நேற்று நீ வரைந்த கோலம்

மழையால் அழிந்ததென்று...

பைத்தியக்காரி..

உன் விரல் செய்த விந்தையை

மனிதர்கள் பார்க்கும் முன்பு

மழை பார்க்க வந்திருக்கும்...

பெருமைப் பட்டுக்கொள்வாயா...`